புதுடில்லி, பிப்.11 ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி மாநில முதல மைச்சர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அவர், சிறப்பு அந்தஸ்து கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
போராட்டத்தின் அடுத்த கட்ட வடிவமாக தலைநகர் டில்லியில் உள்ள ஆந்திரபவனில் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தார். இதன்படி, இன்று (11.2.2019) காலை 8 மணி முதல் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கருப்பு சட்டை அணிந்தபடி போராட் டத்தில் ஈடுபட்டுள்ள சந்திரபாபு நாயுடு, போராட்டத்துக்கு இடையே பேசியதாவது:- எங்களின் கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி தரவில்லை என்றால், அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். இந்த விவகாரம் ஆந்திர மக்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது. எங்களின் சுயமரியாதைமீது தாக்குதல் நடத்தினால் அதை சகித்துக்கொள்ள மாட்டோம். தனி நபர் மீதான விமர்சனத்தை பிரதமர் மோடி உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.
ஆந்திர மாநிலத்திற்குத் தனி அந்தஸ்து கோரி பட்டினிப் போராட்டம் இருக்கும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை அகில இந்திய காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.