
ஆமதாபாத், ஆக. 12-வருகிற 15-ந்தேதி நாடு முழுவதும் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடை பெறுகிறது. சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர் குலைக்கும் வகையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபடலாம் என்று மத்திய உளவுதுறை எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து நாடு முழுவதும் மாநில அரசுகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் நாசவேலை சதித் திட்டத்துடன் பாகிஸ்தனைச் சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 3 பேர் ஊடுருவி இருப்பதாக உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
விமானத்தை அவர்கள் இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து விமானத்தை கடத்தி தாக்குதலில் ஈடுபடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத் தப்பட்டு உள்ளனர். குறிப்பாக குஜராத் மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆமதாபாத் விமான நிலையத்துக்கு கூடுதலாக 3 கம்பெனி மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆமதாபாத் விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர உள்ளூர் போலீசாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
விமான பயணிகள் மற்றும் அவர்களது உடமைகள் கடுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். பார்வையாளர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் கடுமையாக சோதனையிடப்படுகிறது.
விமான நிலையத்தின் லக்கேஜ் அறைகள், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்படுகிறது. இதேபோல் ஆமதாபாத்தின் முக்கிய இடங்களிலும் வழிபாட்டு தலங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
குஜராத்தின் மற்ற முக்கிய நகரங்களான சூரத், வதோதரா உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டுள்ளனர். இதற்கிடையே குஜராத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் அங்கிருந்து வெளியேறி டெல்லிக்குள் பதுங்கி இருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லியிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வழக்கமாக டெல்லியில் சுதந்திர தினத்தின்போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தவிர கூடுதாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்ரீநகர், மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஐதராபாத் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமானப் பயணிகளிடம் தீவிர சோதனை நடக்கிறது.