Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

வரலாற்று சுவடுகள்

பெரியார் அவர்கள் மணமக்களை வாழ்த்தி அறி வுரை கூறுகையில் குறிப்பட்டதாவது:-

எங்களுடைய முயற்சிக்கு முன்வரை இந்த நாட்டில் நமக்கு சம்பந்தமில்லாத பார்ப்பனர்கள் நம்மை அடிமைப்படுத்த ஏற்படுத்திய முறையில் தான் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம்.

சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு தமிழர் களின் வாழ்வில் சகல துறைகளிலும் புரட்சிகரமான மாறுதல் செய்ய முற்பட்டது போலவே, இந்தத் திருமண முறையிலும் இப்படிப்பட்ட மாறுதல் செய்யப்படுகின்றது. எங்களின் இந்த மாறுதல் திருமண முறையானது இன்றைக்கு தமிழ் மக்களிடம் தக்கபடி செல்வாக்குப் பெற்று வருகின்றது.

நாம் தமிழ் மக்கள், தமிழ் நாட்டுக்குரிமையான மக்கள், இப்படிப்பட்ட நமக்கு இத்தகைய நிகழ்ச்சிக்கு என்ன முறைதான் இருந்தது என்று கூறுவதற்கில்லை. நம்மிடையே பார்ப்பனர்கள் இடைக்காலத்தில் தான் புரோகித முறையினைப் புகுத்தினார்கள். இந்த முறை நம்மை மடையர்களாக, இழிமக்களாக வைக்கவே ஏற்படுத்தப்பட்ட முறையாகும். எங்கள் முயற்சியானது இவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டும்.

மனிதன் தனது தேவைக்கு ஏற்ப, வசதிக்கு ஏற்ப பல துறைகளிலும் மாறுதல் ஏற்படுத்திக் கொள்ளுவதுபோல திருமணத் துறையிலும் வசதிக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப மாற்றியும், சுருக்கிக் கொள்ளவும் வேண்டும்.

சுயமரியாதை திருமணத்தின் மூலம் பெண்ண டிமையும், அர்த்தமற்ற மூட நம்பிக்கைகளும் நீக்கப் படுகின்றது. நமது இனஇழிவு ஆனது நீக்கப்படு கின்றது என்று எடுத்துரைத்தார்.  மேலும் பேசுகையில், மணமக்கள் சிக்கனமாகவும், வரவுக்குள் அடங்கிய செலவு உள்ளவர்களாகவும், பகுத்தறிவு  உணர்ச்சி உடையவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவுபவர்களா கவும் வாழ வேண்டிய அவசியம் பற்றி தெளிவுபடுத்தி அறிவுரையாற்றினார்.


(28.6.1963 அன்று திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 9.7.1963)

இறுதியாக தந்தை பெரியார் அவர்கள் அறிவுரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:-

பேரன்புமிக்க தாய்மார்களே, தோழர்களே, மணமக்களே!

உலகில் மக்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று, நம்பிக்கைவாதிகள். முன்னோர்கள் சொன்னது என்ன? சாஸ்திரம் என்ன் சொல்கிறது? புராணம் என்ன சொல்கின்றது? முன்னோர் நடப்பு என்ன என்று பார்த்து அதன்படி நடப்பவர்கள். இரண்டாவது சாரார் அறிவுவாதிகள். மேலே சொன்னவற்றில் நம்பிக்கை வைக்காது, அறிவு கொண்டு அலசிப் பார்த்து அறிவுக்குச் சரி என்று படுகின்ற வழியில் நடப்பவர்கள்.

நான் வெறும் அறிவை ஆதாரமாகக் கொண்டே பேசுகின் றேன். எனது அறிவுக்குச் சரி என்று  எது படுகின்றதோ, அதனையே பேசுகின்றேன். அதைச் சரியா? தப்பா? என்று சிந்தித்துப் பார்க்கக் கூடிய அறிவும் உங்களிடம் இருக்கின்றது. சம்சாரம், யசாகரம் என்று ஒருவர் குறிப்பிட்டார். அது சுத்த முட்டாள்தனமான கூற்றாகும்.

மனிதனுக்கு அறிவு இருக்கின்றது. நன்மை தீமையை உணரும் சக்தியுள்ளது. இப்படிப்பட்ட மனிதன் தம் வாழ்க்கையை ஏன் துன்ப சாகரம் என்று கூற வேண்டும்? நல்ல முறையில் திருத்திக் கொள்ள சக்தி அற்ற சோம்பேறிகளின் கூற்றாகும்.

அடுத்து குறள்படி நடக்க வேண்டும் என்று கூறி னார்கள். குறளில் கூறப்பட்டபடி மக்கள் நடக்க வேண்டும் என்பது பொருந்துமா? குறளில் எல்லா பாகமும் மக்களின் வாழ்க்கை முறைக்கு அறிவுடைமைக்கு ஏற்றதாக இருக்கின் றதா? குறள் 2,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டதாகக் கூறுவார்கள். 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனுக்கு என்ன அய்யா அறிவு இருக்க முடியும்? 2,000 ஆண்டு களுக்கு முன் இருந்த மனிதனுக்கு இன்றைய மக்கள் வாழ்க்கைக்கு ஏற்ற முறைகளை கூறி இருக்க முடியுமா?

குறள் மாநாடு கூட்டி குறளை மக்கள் மத்தியில் மதிப்பு ஏற்படச் செய்தவன் நான்தான். இப்படிப்பட்டவன் கூறுகின் றேன், ஏதோ மக்களுக்குப் பயன்படக்கூடிய சில நல்ல கருத்துகளை குறளில் கூறி இருக்கின்றார். அவ்வளவுதான்.

நான்தான் உங்களை  கேட்கின்றேன், குறளில் எதற்காக அய்யா காமத்துப்பால் என்ற பகுதியை ஏற்படுத்தினார்? இத னால் மக்கள் கண்டுகொள்வது என்ன? இதனைப் படித்துத் தான் காதலை ஒட்ட வைத்துக் கொள்ளவே வேண்டுமா?

மக்களை எந்தக் காரியத்தையும் அறிவின்படி நடக்க வேண்டும். இம்மாதிரி யான நிகழ்ச்சி களில் அர்த்த மற்ற மூடச் சடங்குகளோடு முட்டாள் தனமான செலவுகளும் செய்வதுதான் கவுரவம் என்று கருதும் நிலை மக்கள் மத்தியில் வேரூன்றி விட்டது. ஆடம்பரமான கச்சேரி வைப்பது இதனால் எவருக்கு லாபம்? 3 மணி நேரம் 3,000 பேரை வேலைமெனக் கெட்டு உட்கார வைப்பது எவனுக்கு பாட்டின் பொருள் புரியும்? சங்கீத ஞானம் எத்தனை பேர்களுக்கு இருக்கும்? நான்கு சோம்பேறிகள் முன்னாடி உட்கார்ந்து தலையை ஆட்டுவது கண்டு மற்றவர்களும் தலை ஆட்டுவதைத் தவிர, இதைப் பற்றி என்ன தெரியும்?

பணம் 2,000 அல்லவா நஷ்டம் ஆகின்றது. எனவே, எந்தக் காரியமும் பகுத்தறிவுப்படி சிக்கனமாகத்தான் நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றோம்.

மணமகன் நாகராஜன் நமது கழகத் தோழர். நமது கொள்கையில் தீவிரமானவர். முதலாவது இவரைப் பாராட்ட வேண்டும். சம்பிரதாயப் பாராட்டு அல்ல, இப்படி பல்லாயிரக் கணக்கான பிரமுகர்களையும், பொதுமக்களையும் கூட்டி இப்படி அறிவு சம்பந்தமான பிரச்சாரம் நிகழ்த்தச் செய்த பயனுள்ள காரியத்துக்காகவே பாராட்ட வேண்டும் என்கின்றேன். செலவு சிக்கனமாகச் செய்து இருக்கலாம். அது அவரால் தவிர்க்க முடியவில்லை. மற்றவர்களைப் போல இதற்கு விலக்காக முடியவில்லை.

இப்படிப்பட்ட காரியங்களுக்கு எதற்காக ஆடம்பரமான செலவு? பெரிய விருந்து போடுவது இதனால் திருமண வீட்டாருக்கோ, சாப்பிட்டவர்களுக்கோ கால்துட்டாவது பலன் உண்டா? திருமணத்துக்கு வந்துள்ளவர்கள் தங்கள் வேலை வெட்டிகளை விட்டு மானங்கெட்டு வந்து உள்ளார்கள்.

இவர்கள் சாப்பாட்டுக்காக இங்கு காத்துக் கிடப்பதில் எவ்வளவு அவர்களுக்கு அசவுகரியம்? அவர்கள் வீட்டில் ஆகும் சாப்பாட்டுச் செலவு அவர்கள் இங்கு சாப்பிடுவ தினால் குறைந்து விடவாப் போகின்றது? இல்லை, ஏழைகளுக்கு என்பீர்கள். சோம் பேறிகள் ஆக்குகின்றீர் என்பதுதான் பொருள்.

பிச்சைக்காரர்களுக்கு உதவி என்று கூறினால் சோம்பேறிகளை நாட்டில் வளர்க்கின்றீர்கள் என்பதுதானே அர்த்தம்? திருமண வீட்டாரும், மற்றவர் தம்மை பெருமையாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கடனை வாங்கிச் செலவு செய்தால், கடனை பிறகு யார் கட்ட வேண்டும்?

இதனால்தான் நான் எங்கள் தோழர் களுக்கு கூறுவ துண்டு. திருமணத்தை மாலையில் 5 மணிக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள். சிக்கனமாகும். சாப்பாட் டுச் செலவு ஆகாது. திருமணம் முடிந்து வெத்திலை, பாக்கு எடுத்துக் கொண்டதுடன் போய் விடுவார் கள்.

இன்னும் தீவிரமாகக் கூட எங்கள் தோழர்கள் செய்துள் ளார்கள். தங்கள் குடும்பத்தார் முன்னிலையிலோ, ரிஜிஸ்டர் ஆபிசிலோ திருமணம் முடித்துக் கொண்டு இதனை அறிவிக்க 5 ரூபாய் கொடுத்து நாங்கள் இருவரும் இந்த தேதி முதல் திருமணம் செய்து கொண்டு கணவன் - மனைவியாக ஆகி விட்டோம் என்பதை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம் என்று விளம்பரம் போட்டு விடுவார்கள். எனது காலஞ்சென்ற நண்பர் சி.டி. நாயகம் அவர்களே இப்படிச் செய்தார் என்று எடுத்துரைத்தார்.

மேலும் பேசுகையில், அர்த்தமற்ற சடங்குகளால் நாம் மடையர்களாக ஆவதோடு நாமே இழிந்த ஜாதி மக்கள் என்கின்ற தன்மையை ஒத்துக் கொள்ளுவதாகவும் ஆகும் தன்மைகள் பற்றியும், சோதிடம், நாள், நட்சத்திரம் பார்ப்பதில் உள்ள முட்டாள்தனம் பற்றியும் தெளிவுபடுத்திப் பேசி, மணமக்கள் சிக்கனமாகவும், பகுத்தறிவுடனும், மக்கள் பேற்றிலும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறி முடித்தார்.

(22.7.1962 அன்று பாபநாசத்தில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 1.8.1962

பின்னர் தந்தை பெரியார் அவர்கள் அறிவுரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:- பேரன்புமிக்க தாய்மார்களே, தோழர்களே, நண்பர் நட்சத்திரம் அவர்களே!

நாம் இங்கு கூடி இருப்பது நண்பர் திரு. நட்சத்திரம் அவர்களின் புதுமனை புகுவிழாவின் பொருட்டு குழுமி இருக்கின்றோம். இப்படி புதுமனை புகுவது எல்லோரும் செய்கின்றார்கள். மற்றவர்கள் செய்வதற்கும் நண்பர் நட்சத்திரம் செய்வதற்கும் ரொம்ப வித்தியாசம் உள்ளது.

சாதாரணமாக ஒரு புதுமனையில் வாசம் செய்ய முற்படுபவர்கள் இது மற்றவர்களுக்குத் தெரியும் படி செய்ய வேண்டியுள்ளது. இப்படிப் பட்ட நிகழ்ச்சி இல்லாமல் இருந்தால் ஜனங்கள், இவர் பழைய வீட்டில் இருப் பதாகத்தான் எண்ணுவார்கள். திருமணம் கூட இப்படித்தான். இன்னார் இதுவரை தனியாக இருந்தார்கள். இதுமுதல் இருப்பவரும் சேர்ந்து வசிக்கின்றார்கள் என்பதை மற்றவருக்கு உணர்த்தவே யாகும். ஒருவர் புதுக் கடை வைத்தால் கூட விளம்பரப்படுத்தி அனைவருக்கும் அழைப்புக் கொடுத்து திறப்பது விளம்பரத்துக்காகவே தான் இது மிகவும் அவசிய மாகும்.
இம்மாதிரி காரியங்களுக்கு ஏராளமாக செலவு செய்வதைக் கூட நான் கண்டித்து வருகின்றேன். இப்படிப்பட்ட நிகழ்ச் சியைக் கூட மதத்தோடு புகுத்திப் பிணைத்து விட்டார்கள். இப்படி வீடு அமைக்க நிலை இப்படி இருக்க வேண்டும். மனை இப்படி இருக்க வேண்டும், ஜன்னல் இப்படி இருக்க வேண்டும் என்று கூறி இதற்காக மனை சாஸ்திரம் என்ற ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்கள். நம்முடைய சாஸ்திரம் கிறிஸ்துவனுக்கு, முஸ்லிமுக்குப் பொருந்தாது. அவன் சாஸ்திரம் நமக்குப் பொருந்தாது என்பார்கள். எல்லோருக்கும் வாழக் கூடியதாக ஒன்றை நிர்ணயிக்கும் போது ஏன் இப்படிப்பட்ட முட்டாள்தனம்.

நாள், நட்சத்திரம் பார்த்து அஸ்திவாரம் போடுவது, முகூர்த்தம் பார்த்து நிலை வைப்பது இப்படி எல்லாம் செய்கின்றனர். நான் 40, 50க்கு மேல் வீடுகள், கட்டிடங்கள் கட்டி இருப்பேன். இன்னும் கட்டிடம் கட்டிக் கொண்டுதான் இருக்கின்றேன். ஒன்றுகூட  நாள், நட்சத்திரம், முகூர்த்தம் பார்த்து கட்டவே இல்லை. எல்லா வீடுகளும் எல்லாமும் நல்ல நிலையில்தான் உள்ளன. ஆனால், நாள், நட்சத்திரம் பார்த்து கட்டிய எங்கள் சொந்தக்காரர்கள் வீடுகள் இன்று கடனுக்குப் போனதையும் காண்கின்றேன். எனவே, இப்படிப்பட்ட செய்கைகள் எல்லாம் மிக மிக முட்டாள்தனமானதாகும்.

எங்கள் இயக்கம் சொல்லுவது எல்லாம் மனிதன் பகுத்தறிவுப்படி நடக்கணும். முட்டாள்தனமாக அர்த்தமற்ற சடங்குகள் செய்யக் கூடாது என்பது தான். இப்படிப்பட்ட சடங்குகள் செய்து முட்டா ளாக, ஓட்டாண்டியாக ஆனவர்கள்; எல்லாம் நாம்தான் இதனால் பலன் அடைந்து வருபவன் எல்லாம் பார்ப்பானேயாகும். அரசாங்கம் கூட முட்டாள்தனமாக கப்பல் கட்டிவிட வேண்டுமானால் கூட நாள், நட்சத்திரம் பார்த்து தேங்காய் உடைத்து விடுகின்றான். பார்ப் பான் ஆதிக்கம் இருப்பதால் இப்படி செய்கின்றார்கள்.

தோழர்களே, இப்படி பகுத்தறிவுப்படி இந்த விழாவை ஏற்படுத்திய நண்பர் நட்சத்திரம் அவர்களை நாம் பாராட்டி யாக வேண்டும். இந்த புதுமனையில் திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்துள்ளார். இது மிகவும் புத்திசாலித்தனமான செய்கையாகும். இல்வாழ்க்கையைப் பற்றி திருவள்ளுவர் சிறப்பித்துக் கூறியுள்ளார். இப்படிப்பட்ட படம் இல்லாமல் சிவன் படம், விஷ்ணு படம், காளி படம் போன்றவைகளை வைத்தால் என்ன பிரயோசனம்? வீடுகளை அலங்கரிக்க படங்கள் வைக்க வேண்டும் என்று கருதினால் அறிவுக்குப் பொருத்தமான இதுபோன்ற படங்களை வைக்க வேண்டும்.

எங்களுக்கு வாழ்த்தில் நம்பிக்கையில்லை. வாழ்த்தில் நம்பிக்கை வைத்து வாழ்த்து கண்டு சந்தோஷப்பட்டால் வசவு கண்டு, விசனப்படவும் வேண்டுமே. நாங்கள் ஆசைப்படுவதெல்லாம், நண்பர் நட்சத்திரம் அவர்கள் எப்படி மூட நம்பிக்கையை ஒழித்து இப்படி அறிவுக்குப் பொருத்தமான காரியத்தை செய்துள்ளாரோ, அதுபோலவே மேலும் மேலும் நடந்து பொதுத் தொண்டுக்கும் உதவ வேண்டும் என்பதே என்று கூறி முடித்தார்.

(18.7.1962 அன்று வள்ளியூர் ஸ்டார் இல்லத் திறப்பு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை - விடுதலை 28.7.1962)

எவன் வரவுக்கு மேல் செலவு செய்கிறானோ அது விபசாரத்திற்கொப்பாகும். நம்முடைய வாழ்க்கையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் மூடக் கொள்கைகளுக்கு இடமளிக் கக் கூடாது. கோவிலுக்குச் சென்று கும்பிட்டு அழுக்குத் தண்ணீரில் முழுகுவதையும், குழவிக் கல்லைச் சுற்றுவதையும் சினிமாவுக்குப் போகும் பழக்கத்தையும் அறவே விட்டுவிட வேண்டும். காட்சிக்காக சொல்ல வேண்டு மானால், பம்பாய், கல்கத்தா, மலேயா போன்ற இடங்களுக்குச் சென்று அங்குள்ள இயற்கை வனப்பைப் பார்த்து பொது அறிவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

பிள்ளை பெறுவதைக் கூடுமான வரையில் குறைத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமான ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டால், பள்ளியில் ஒன்று படிக்கிறது, கையில் ஒன்று இருக்கிறது, வயிற்றில் ஒன்று இருக்கிறதைப் பார்க்கிறோம். இப்படி இருப்பதால், பெற்றவர்களுக்கு வேண்டுமானால் ஆசையிருக்கலாம். இதனால் பொது உணர்ச்சி இருக்காது. இதன்மூலம் மனிதனுடைய ஒழுக்க மும், நேர்மைக் குணமும் நாளுக்கு நாள் குறையும். கடன் உண்டாகும். அதன்மூலம் கவலைகள் ஏற்படும். இவ்வளவுக் கும் காரணம் இந்தக் குழந்தைகள்தான். இதனால் தொல்லைபடுவதைவிட கர்ப்பத் தடை செய்து கொள்ளலாம். சர்க்கார் கர்ப்பத்தடை செய்துக் கொள்கிறவர்களுக்கு முப்பது ரூபாய் வீதம் தருகிறார்கள்.

அதை நல்ல முறையில் நாம் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியோடு கழிக்க வேண்டும். ஒன்றிரண்டு குழந்தைகள் இருந்தால் போதும். அதை நன்றாக வளர்த்து ஒழுக்கமுடையதாக ஆக்க வேண்டும்.

இது ஆனி மாதம். இந்த மாதத்தில் திருமணம் செய்து கொண்டு பங்குனி மாதம் முடிந்த பிறகு நான்கு மாதமாகியும் இன்னும் குழந்தைப் பிறக்கும் அறிகுறி தெரியவில்லையே என்று கவலைப்பட்டு ராமேஸ்வரம் அழைத்துப் போய் குழவிக் கல்லை சுற்ற வைப்பார்கள். குழந்தை பிறப்பதற்கும் ராமேஸ் வரத்திற்கும் என்ன சம்பந்தம் என்று சிந்திப்பதே இல்லை. நம்முடைய சமுதாயத்தைத் திருத்துவதற்கென்று துணிந்து நிற்பவர்கள் நாங்கள். மனிதனுடைய அறிவைக் கெடுத்து அடிமைத் தனத்தை உண்டாக்குகின்ற சாஸ்திரம், வேதம், புராணங்களை ஒழிக்க வேண்டும். கடவுள் தன்மை களை அழித்து ஒழிக்க வேண்டும். ஜாதி, மதப் பூச்சாண்டியை நாட்டை விட்டே துரத்த வேண்டுமென்று முதன்முதல் சொன்னபோது இந்த நாட்டில் எங்களுக்குக் கிடைத்தது சாணி அடி, முட்டையில் மலத்தை ஊற்றி அடிப்பான். இதை எல்லாம் அனுபவித்தவர்கள் நாங்கள். எதற்காக இவ்வளவு தொல்லைக்கும் பாடுபட்டு வருகிறோம்? எனக்குப் புள்ளைக் குட்டி ஒன்றும் கிடையாது. இருப்பதை வைத்துக் கொண்டு  சுகமாக வாழலாம். அரசியல் கட்சிக்காரன் புரட்டுக்கும் பார்ப்பானுடைய வசைவுக்கும் மதவாதிகளுடைய எதிர்ப்பிற்கும் ஈடு கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வளவு தொல்லை களுக்கும் சளைக்காமல் பாடுபடுவது யாருக்காக என்பதை நீங்கள் நன்கு உணர வேண்டும்.

நம்முடைய சமுதாய நிலைக்கு அதன் கேடுகளை உணர்ந்து காரியம் செய்யக் கூடியவர்கள் ஒருவரும் கிடைக்கவில்லை. இப்பொழுது அரசியலில்  காமராசர் வந்ததும் ஓரளவு நன்மை செய்கிறார். அதைக் கண்டு இந்தப் பார்ப்பனர்கள் கச்சைக் கட்டிக் கொண்டு ஒழிக்கப் பார்க்கிறார்கள். அவரும், அவருக்கிருக்கும் எதிர்ப்புகளை எல்லாம்  சமாளித்துக் கொண்டு நமக்கு ஓரளவு நன்மை செய்கிறார். காரணம் என்ன? காமராசருக்கு குடும்பம் இல்லை. புள்ளைக் குட்டி ஒன்றும் கிடையாது. தனி மரம். அதனால்தான் எதையுமே இலட்சியம் செய்யாமல் துணிந்து காரியம் செய்ய முடிகிறது.

ஒரு மனிதன் தனக்காக பிறக்கவில்லை. தன்னால் மற்றவர்களுக்கு என்ன நன்மை செய்தோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படி எண்ணிப் பார்த்து செயல் புரிவதுதான் மனிதத் தன்மை ஆகும்.

நம்முடைய நாட்டில் பொது வாழ்க்கை என்பது பொறுக்கித் தின்பது என்று ஆகிவிட்டது. அது மட்டுமல்ல, மதம், அரசியல், கடவுள், வேதம் என்று இருப்பதெல்லாம் மக்களை ஏமாற்றி கிடைத்தவரையில் சுரண்டி வாழ்வதற்காக ஆகும். இதை விளக்கி எவ்வளவுதான் சொன்னாலும் கவலை எடுத்து சிந்திப்பதில்லை. சிந்தித்துப் பார்த்து எந்த காரியத்தையும் செய்தால்தான் தெளிவு ஏற்படும். ஆகவே, என் அபிப்பிராயத்தை இந்த திருமணத்தின் மூலம் சொன்னேன். அவற்றை அப்படியே நம்பி விடாதீர்கள். நீங்கள் மனிதர்கள், உங்களுக்கு பகுத்தறிவு இருக்கிறது. அதிலே இதை ஆராயுங்கள். அதன் முடிவை பாருங்கள். தப்பு என்று பட்டால் விட்டு விடுங்கள். சரி என்று பட்டால் பகுத்தறிவுள்ள மனிதர்களாவதற்கு முன்வாருங்கள் என்று கூறினார்.

(9.7.1962 அன்று சோழபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை - விடுதலை 21.7.1962.)

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இடம் - மத்திய அரசு சட்டம் செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு எனும் தேனினும் இனிய செய்தியினை (13.4.2012) நாளேட்டின் வாயிலாகப் படித்தேன்.

எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக் குக் கல்வியைக் கொடுக்காதே என்று கூறுவதுதான் மனுதர்மம். ஆனால், தந்தை பெரியார் அவர்கள் எதையும் சமுதாயச் சிந்தனையோடு, தொலை நோக்குப் பார்வையோடு சீர்தூக்கிப் பார்த்து அதனால் ஏற்படும் விளைவு களைப் பற்றி நன்கு ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருபவர் ஆவார். ஆதலால், பார்ப்பனர்களால் திட்டமிட்டு எழுதப்பட்ட மனுதர்மத்தின் சூட்சமத்தை, நயவஞ் சகத்தை பட்டிதொட்டி எங்கும் உள்ள பாமர மக்களிடம் எடுத்துக்கூறி, இடை விடாது சூறாவளிப் பிரச்சாரம் மேற் கொண்டார்.

உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் எழுச்சிமிகு உரையினைக் கேட்டு பாமர மக்கள் சிந்திக்கத் தொடங் கினர். பெரும்பான்மையான மக்கள் மனதில் தெளிவும், தன்னம்பிக்கையும், புதிய எழுச்சியும் பிறந்தது. இதன் மூலம், பாமர மக்கள் படிப்படியாக கல்வியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் நன்கு உணரத் தொடங்கினர்.

தந்தை பெரியார் காரணமாகவும், கல்வி வள்ளல் காமராசர் காரியமாகவும் இருந்து செயல்பட்டதின் பயனாய் நாடெங்கும் ஆயிரக்கணக்கான பள்ளி கள் திறக்கப்பட்டன. பெரியார் அவர்களால் பச்சைத் தமிழர் என்று போற்றப்பட்ட காமராசர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த காலத்தில்தான் கிராமங்கள் தோறும் கல்வி நீரோடை மடை திறந்த வெள்ளம்போல பாய்ந்தோடின.

இதன் பயனாய் பாமர மக்கள் தங்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க ஆர்வமுடன் முன்வந்தனர். இதன் காரணமாக, சூத்திர மக்கள் அனைவரும் கல்வி அறிவு பெற மேற் கண்ட, இருபெரும் இன மீட்பாளர்களும் வழிகோலினர் என்பது காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுப் பேருண்மையாகும்.

இதன் மூலம், எதைக் கொடுத்தாலும் சூத்திர மக்களுக்கு கல்வி அறிவைக் கொடுக்காதே என்று பார்ப்பனர்களால் திட்டமிட்டு எழுதப்பட்ட, மனிதநேயமற்ற மனுதர்மத்தின் கோரமுகத்தை மக்கள் மன்றத்தின் முன்பு மண்டியிடச் செய்த பெருமை உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களையும், கல்வி வள்ளல் காமராசர் அவர்களையும் மட்டுமே சேரும்.

மேற்கண்ட தலைவர்களின் சீரிய முயற்சியாலும், உயர்ந்த நோக்கத்தாலும் ஏழை - எளிய மாணவர்கள் பலர் படித்துப் பட்டம் பெற்று தற்போது மாவட்ட ஆட்சி யராகவும், தலைசிறந்த நீதிபதிகளாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளாகவும், மனித உயிர் காக்கும் மருத்துவராகவும் மற்றும் பல்வேறு உயர் பதவிகளில் அங்கம் வகித்து தத்தமது துறைகளில் முத்திரை பதித்து வருகின்றனர் என்பதை அறியும் போது; தன்னலம் கருதாமல் இனத்தின் மீட்சிக்காக அயராது உழைத்த நமது இன மீட்பாளர்களை இந்தவானம் உள்ளவரை, வையகம் உள்ளவரை திராவிடர் இன மக்கள் நன்றி உணர்வோடு நாளும் நினைத்து புகழ்வர் என்பது உறுதி.

அனைத்திற்கும் மகுடம் சூட்டியது போல்; அனைத்து குழந்தைகளும் அடிப்படைக் கல்வி பெறுவதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசால் கல்வி உரிமைச் சட்டம் 2009-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, அவை அரசியல் சட்டத்தின் 21 (ஏ) பிரிவின்கீழ் நாடாளுமன் றத்தின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டத்தின்படி, நாடு முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவிகித இடங்களை கட்டாயம் ஒதுக்கி அவர் களுக்கு இலவசமாக கல்வி வழங்க வேண்டும் என்பதே இச்சட்டத்தின் உயரிய நோக்கமாகும்.

ஆனால், ஒரு சில தனியார் பள்ளிக் கூடங்கள் மற்றும் நிர்வாகிகள் இவ்வர லாற்று உண்மைகளை சற்றும் உணராத வர்களாக அல்லது தெரிந்தும் தெரியாத வர்களாக, மய்ய அரசு கொண்டு வந்துள்ள கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் ஏழை - எளிய மாணவர்களைச் சேர்த்தால் பள்ளியின் தரமும், ஒழுக்கமும் சீர்கெட்டு விடும் என்றும் மேலும் இவை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது என்றும் உச்சநீதிமன்றத்துக்குச் சென்று மனுதாக்கல் செய்வதும், வாதிடுவதும் என்பது ஏழ்மையை கொச்சைப்படுத்தும் இழிவான செயல் மட்டுமின்றி, குழந்தை களின் அடிப்படை உரிமையான கல்வி பெறும் உரிமையைத் தடுக்கும் உரிமை மீறல் செயலாகும்.

தற்போது இவ்வழக்கில், மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியும், அவை செல்லும் என்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ப்பு தீர்ப்பினை (12.04.2012) உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெளிவுபடக் கூறியுள்ளனர்.

தந்தை பெரியார் அவர்களின் பெரு முயற்சியால் கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீட்டுக் கொள்கையால்  தமிழக மக்கள் மட்டுமின்றி, இந்திய மக்கள் அனைவரும் பயனடைந்து வருகின்றனர் என்பது பெரியார் கொள்கைக்குக் கிடைத்த இமாலய வெற்றியாகும்.

- சீ. இலட்சுமிபதி, தாம்பரம்

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்