செவ்வாய், 15 மே 2012 16:57

இதுவரை, ஆண்களே பெற்று வந்த சிறந்த ராணுவ அதிகாரி பயிற்சிக்கான விருதை, இளம்பெண் ஒருவர் தட்டிச் சென்றுள்ளார்.
சென்னை பரங்கிமலையில், ராணுவ அதிகாரி பயிற்சி மய்யம் (ஓ.டி.ஏ.,) பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலுள்ள பெரும்பாலான ராணுவ அதிகாரிகள், இங்கு பயிற்சி பெற்றவர்களாகத்தான் இருப்பர்.
கடந்த, 1992லிருந்து, பெண் அதிகாரிகளுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்துப் பயிற்சியிலும் சிறப்பாக செயல்படுகிறவர்களுக்கு, ராணுவ உயரதிகாரி, ஸ்வோர்ட் ஆப் ஹானர்' (கவுரவ வாள்) என்ற உயரிய விருதை, பயிற்சி நிறைவு விழாவில் அளிப்பார். இதுவரை, ஆயிரக்கணக்கில் ஆண், பெண் அதிகாரிகள் பயிற்சி பெற்றிருந்தாலும், ஆண்களே இந்த விருதைத் தொடர்ந்து பெற்று வந்தனர். இதற்கு, இளம் பெண் ஒருவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஆண்களிடமிருந்து அந்த பெருமைக்குரிய விருதை தட்டிப் பறித்தவர், சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த அஜித்குமார் - பீனா தம்பதியின் இளையமகள் திவ்யா. வயது: 21. இவர் ஓ.டி.ஏ.,யில், கடந்த, 11 மாதங்களாக பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்தப் பயிற்சி முகாமில், பல்வேறு மாநிலத்திலிருந்து, 157 ஆண்களும், 70 பெண்களும் பங்கு பெற்றுள்ளனர். ஆண்களுக்கு இணையாக பயிற்சி பெற்றது மட்டுமல்ல, அனைத்து பயிற்சிகளிலும், உடலளவிலும், மனதளவிலும் ஆண்களை விட, சிறப்பாக செயல்பட்டதால், திவ்யாவை, பெஸ்ட் கேடட்' என்ற பெருமை தேடி வந்துள்ளது.
குட் ஷெப்பர்டு பள்ளியில் படித்த திவ்யா, பிளஸ் 2வில், 94 சதவீத மதிப்பெண் பெற்றார். பின், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், பி.காம்., படிப்பை, 72 சதவீத மதிப்பெண் பெற்று, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
இளம் வயதில், இப்படி ஒரு சாதனையை செய்தது பற்றி திவ்யா கூறியதாவது:
எனக்கு, அய்.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை தான் சிறுவயதில் இருந்தது. படிக்கும் காலத்தில், என்.சி.சி., முகாம்களுக்கு செல்வேன். அங்கு வரும் ராணுவ உயரதிகாரிகள், அவர்களின் வீரதீர செயல் களைப் பற்றி பேசுவர். அது, எனக்குள் ஒரு பொறியைத் தட்டிவிட்டது.
எதைச் செய்கிறோமோ, அதை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்பதை வெற்றியின் மந்திரமாக ஏற்றுக் கொண்டேன்.
துப்பாக்கி பிடிக்கும் திவ்யாவின் கைகள், சிறுவயதில் பரதநாட்டியத்தையும் அபிநயம் பிடித்துள்ளன. கூடைப் பந்து, உடற்பயிற்சி போட்டிகளிலும் இவர் பங்கு பெற்று, தங்கம், வெள்ளிப் பதக்கங்களை பெற்றுள்ளார்.
2008இல் டில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில், தமிழகத் தின் சார்பில், திவ்யா பங்கேற்றுள்ளார். என்.சி.சி., மாணவர் அணியில் சிறப்பாக அணிவகுத்துச் சென்றவர் மற்றும் அகில இந்திய, பெஸ்ட் கேடட்' ஆகிய இரட்டிப்பு பெருமையையும் ஒருங்கே பெற்றது, அவருக்கு மேலும் புகழ் சேர்த்துள்ளது.
அடுத்த சாதனையை படைத்து, கடந்த வருடம், செப்., 18ஆம் தேதி நடந்த பயிற்சி நிறைவு விழாவில், ராணுவ உயரதிகாரி வி.கே.சிங்கிடம் இருந்து, ஸ்வோர்ட் ஆப் ஹானர்' விருதையும் திவ்யா பெற்றிருக்கிறார்.