Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

மகளிர்

மே மாதத்தில் வெளியிடப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 11 பேர் வெற்றி பெற்றிருந்தனர். இம்மாநில வரலாற்றில் அய்.பி.எஸ். தேர்வில் இவ்வளவு பேர் தேர்ச்சி அடைந்திருப்பது இதுவே முதல் தடவை ஆகும். தேர்வானவர் களில் 5 பேர் மருத்துவர்கள், 2 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பண்டிட்கள்.

தீவிரவாதிகளும் பிரிவினைவாதிகளும் நிறைந்த சோப்பூர் பகுதியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பஷீர் அகமது பட் தரவரிசையில் 434ஆவது இடத்தை (ரேங்க்) பிடித்துள்ளார்.

169ஆவது இடம் பூஜா ஹாலி, பண்டிட் இனத்தில் இருந்து தேர்ச்சி பெற்றுள்ள 2ஆவது பெண் ஆவார். 25 வயதான சையது ஷெரில் அஸ்கார் 118ஆவது இடத்தை பிடித்தது மட்டுமின்றி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து அய்.பி.எஸ் தேர்வு பெற்ற முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அய்.பி.எஸ்.சில் தேர்வு பெற்றதை நான் ஒரு சவாலாகவே ஏற்றேன். இந்த பெருமை எனது குடும்பத்தாரையே சாரும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றுவதையே விரும்புகிறேன் என்று ஷெரீஸ் மேலும் தெரிவித்துள்ளார். இவரது தந்தை ஜம்மு காஷ்மீர் மேலவை உறுப்பினர் (எம்.எல்.சி.) ஆவார்.

பெற்றோருக்குத் தெரியாமல் அய்.ஏ.எஸ். தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார்  கும்பகோணம் கல்லூரி மாணவி சாஜிபானு . கேரள மாநிலம் மலபுரத்தைச் சேர்ந்த மாணவி சாஜிபானு (22). கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரி அன்னை கல்லூரியில் எம்.பி.ஏ. பயிலும் இவர், இதே கல்லூரியில் பி.எஸ்.சி., அய்.டி. பிரிவில் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் ஏழாமிடம் பெற்றவர்.

அகில இந்திய அளவில் 2,400 பேர் எழுதிய சிவில் சர்வீசஸ் தேர்வில், 910 பேர் வெற்றி பெற்றனர். இதில் இந்திய ஆட்சிப் பணி (அய்ஏஎஸ்) தேர்வில் வெற்றி பெற்ற 170 பேரில், முதல் முயற்சியிலேயே 98ஆவது இடத்தைப் பிடித்த சாஜிபானுவுக்கு அந்தக் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

பின்னர் அவர் அளித்த பேட்டி:

எனக்கு அய்.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால், எனது பெற்றோர் அதை விரும்பவில்லை. எனது மாமா, சகோதர, சகோதரிகள், உறவினர்கள் மற்றும் கல்லூரித் தலைவர், செயலர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனது விருப்பத்துக்கு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தினர்.

இக்கல்வி நிறுவனத்தில் உள்ள நூலகம் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு அய்.ஏ.எஸ். தேர்வு எழுத முடிவு செய்தேன்.

நான் அய்.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வந்தது எனது பெற்றோருக்குக் கூடத் தெரியாது. கல்லூரிக்கு கட்டுவதற்காக கொடுத்த செமஸ்டர் கட்டணத்தையே அய்.ஏ.எஸ். தேர்வு எழுத செலவழித்தேன்.

மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வெழுதி, முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளேன். என்னுடைய அய்.ஏ.எஸ். கனவை நனவாக்கியது தமிழகம்தான். தமிழக மக்களுக்கு சேவை செய்வதே எனது விருப்பம் என்றார் சாஜிபானு.

இதுவரை, ஆண்களே பெற்று வந்த சிறந்த ராணுவ அதிகாரி பயிற்சிக்கான விருதை, இளம்பெண் ஒருவர் தட்டிச் சென்றுள்ளார்.

சென்னை பரங்கிமலையில், ராணுவ அதிகாரி பயிற்சி மய்யம் (ஓ.டி.ஏ.,) பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலுள்ள பெரும்பாலான ராணுவ அதிகாரிகள், இங்கு பயிற்சி பெற்றவர்களாகத்தான் இருப்பர்.

கடந்த, 1992லிருந்து, பெண் அதிகாரிகளுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்துப் பயிற்சியிலும் சிறப்பாக செயல்படுகிறவர்களுக்கு, ராணுவ உயரதிகாரி, ஸ்வோர்ட் ஆப் ஹானர்' (கவுரவ வாள்) என்ற உயரிய விருதை, பயிற்சி நிறைவு விழாவில் அளிப்பார். இதுவரை, ஆயிரக்கணக்கில் ஆண், பெண் அதிகாரிகள் பயிற்சி பெற்றிருந்தாலும், ஆண்களே இந்த விருதைத் தொடர்ந்து பெற்று வந்தனர். இதற்கு, இளம் பெண் ஒருவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஆண்களிடமிருந்து அந்த பெருமைக்குரிய விருதை தட்டிப் பறித்தவர், சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த அஜித்குமார் - பீனா தம்பதியின் இளையமகள் திவ்யா. வயது: 21. இவர் ஓ.டி.ஏ.,யில், கடந்த, 11 மாதங்களாக பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்தப் பயிற்சி முகாமில், பல்வேறு மாநிலத்திலிருந்து, 157 ஆண்களும், 70 பெண்களும் பங்கு பெற்றுள்ளனர். ஆண்களுக்கு இணையாக பயிற்சி பெற்றது மட்டுமல்ல, அனைத்து பயிற்சிகளிலும், உடலளவிலும், மனதளவிலும் ஆண்களை விட, சிறப்பாக செயல்பட்டதால், திவ்யாவை, பெஸ்ட் கேடட்' என்ற பெருமை தேடி வந்துள்ளது.

குட் ஷெப்பர்டு பள்ளியில் படித்த திவ்யா, பிளஸ் 2வில், 94 சதவீத மதிப்பெண் பெற்றார். பின், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், பி.காம்., படிப்பை, 72 சதவீத மதிப்பெண் பெற்று, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

இளம் வயதில், இப்படி ஒரு சாதனையை செய்தது பற்றி  திவ்யா கூறியதாவது:

எனக்கு, அய்.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை தான் சிறுவயதில் இருந்தது. படிக்கும் காலத்தில், என்.சி.சி., முகாம்களுக்கு செல்வேன். அங்கு வரும் ராணுவ உயரதிகாரிகள், அவர்களின் வீரதீர செயல் களைப் பற்றி பேசுவர். அது, எனக்குள் ஒரு பொறியைத் தட்டிவிட்டது.

எதைச் செய்கிறோமோ, அதை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்பதை வெற்றியின் மந்திரமாக ஏற்றுக் கொண்டேன்.

துப்பாக்கி பிடிக்கும் திவ்யாவின் கைகள், சிறுவயதில் பரதநாட்டியத்தையும் அபிநயம் பிடித்துள்ளன. கூடைப் பந்து, உடற்பயிற்சி போட்டிகளிலும் இவர் பங்கு பெற்று, தங்கம், வெள்ளிப் பதக்கங்களை பெற்றுள்ளார்.

2008இல் டில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில், தமிழகத் தின் சார்பில், திவ்யா பங்கேற்றுள்ளார். என்.சி.சி., மாணவர் அணியில் சிறப்பாக அணிவகுத்துச் சென்றவர் மற்றும் அகில இந்திய, பெஸ்ட் கேடட்' ஆகிய இரட்டிப்பு பெருமையையும் ஒருங்கே பெற்றது, அவருக்கு மேலும் புகழ் சேர்த்துள்ளது.

அடுத்த சாதனையை படைத்து, கடந்த வருடம், செப்., 18ஆம் தேதி நடந்த பயிற்சி நிறைவு விழாவில், ராணுவ உயரதிகாரி வி.கே.சிங்கிடம் இருந்து, ஸ்வோர்ட் ஆப் ஹானர்' விருதையும் திவ்யா பெற்றிருக்கிறார்.

ஆந்திராவின் பயணிகள் ரயில் எஞ்சினின் முதல் பெண் டிரைவர் என்ற பெருமை சத்யவதி என்ற பெண்ணுக்கு கிடைத்துள்ளது. அய்தராபாத் புறநகர் ரயிலை இயக்கி அனைவரின் பாராட்டுக்களை பெற்றார்.

ஆந்திராவைச் சேர்ந்த சத்யவதி 1999இல் பெங்களூருவில் ரயில்வே பணியில் சேர்ந்தார். அங்கு ரயில் இன்ஜின் உதவி ஓட்டுநராக பணிபுரிந்த அவர் செகந்திராபாத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதன்பின்னர் 2005ஆம் ஆண்டு சரக்கு ரயில் இன்ஜின் ஓட்டுநராக பதவி உயர்த்தப்பட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக, பயணிகள் ரயில் இன்ஜின் உதவி ஓட்டுநராக, பணியாற்றி வந்த சத்யவதி கடந்த ஜனவரியில், பயணிகள் ரயிலை இயக்குவதற்கான பயிற்சியையும், வெற்றிகரமாக முடித்தார்.

அய்தராபாத் புறநகர் பகுதிகளுக்கு இடையே இயக்கப்படும், மகளிர் சிறப்பு ரயிலை இயக்குவதற்கான பொறுப்பு, சத்தியவதிக்கு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பலாக்னுமா ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, லிங்கம்பள்ளி ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் ரயிலை, உதவியாளர் யாருமின்றி தனியாக அவர் இயக்கினார். இதன் மூலம், ஆந்திராவின் ரயில் இன்ஜின் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.

பயணிகள் ரயிலை இயக்கியது குறித்து கருத்து தெரிவித்த சத்யவதி, இது என் வாழ்நாளில் முக்கியமான தருணம் என்று குறிப்பிட்டார். சரக்கு ரயில் இயக்குவதற்கும், பயணிகள் ரயில் இயக்குவதற்கும் வித்தியாசம் உள்ளது. நான் எனக்கு அளிக்கப்பட்ட பணியை மிகுந்த பொறுப்புணர்வோடு திறம்பட செய்வேன் என்று கூறினார்.

ரூட்செட் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவு மேம்பாட்டு பயிற்சிகளை வெவ்வேறு இடங்களில் வழங்கி வருகிறது. ஒவ்வொரு பயிற்சிக்கும் குறைந்தபட்சம் ஒன்று அல்லது ஆறு வார கால அளவு ஆகும். இந்த பயிற்சி சுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு டெய்லரிங் தொடங்கி உணவு பதப்படுத்துதல் வரை நூற்றுக்கணக்கான சுயதொழில் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிறுவனத்தில் வழங்கப்படும் பயிற்சிகள் முற்றிலும் இலவசம். பயிற்சி பெறுபவர்களுக்கு தங்கும் வசதியும் உள்ளது.

இந்நிறுவனத்தில் கற்பிக்கப்படாத பயிற்சிகளே இல்லை எனலாம். செயற்கை வைரம் பட்டை தீட்டுதல் முதல் ஆடை வடிவமைப்பு, மோட்டார் ரீவைண்டிங், தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகள் வரை 100 வகைப் பயிற்சிகள் இலவசமாக நடத்தப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு: http://www.rudsetitraining.org/pages/training.html

ரூட்செட் நிறுவனம், விமான நிலைய சாலை, காவல்நிலையம் அருகே, பெருங்குடி, மதுரை-12,  தொலைபேசி: 0452 269069, 9486369825.

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்