உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் பெப்சி* - *கோக் குளிர்பானங்களை விற்க மாட்டோம் என்று அறிவித்த தமிழ்நாட்டு வணிகர் சங்கங்களின் முடிவு வரவேற்கத்தக்கது* - *பாராட்டத்தக்கது!
பெப்சி - கோக் குளிர்பானங்களை வாங்காதீர்!........
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகி, நம் நாட்டு இளைஞர்களின், முதியவர்களின் உடல்நலத்திற்கு மிகப்பெரும் கேடு செய்யும் குளிர்பானங்களான பெப்சி, கோக் போன்றவைகளை வரும் 2017 மார்ச் முதல் நாள் முதல் விற்பனை செய்யமாட்டோம் என்று தமிழ்நாட்டு வணிகர் சங்கங்கள் முடிவு செய்து அறிவித்திருப்பதை திராவிடர் கழகம் மனமார வரவேற்றுப் பாராட்டுகிறது!
தங்களது லாபத்தையே இழந்தும் சமூகநலம், மனித நலம் பேணும் நமது வணிகப் பெருமக்களுக்கு நம் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.
மேற்கண்ட குளிர்பானங்கள் தவிரப்பால், ரூ.1,400 கோடி அளவில் நம் நாட்டு வணிகர்களுக்கு இழப்பு ஏற்படக் கூடும்; குளிர்பானங்கள் மட்டுமல்ல, சிப்ஸ் மற்றும் சிறு தீனிகளையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் புறக்கணித்து, நமது ஊர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளன.
முன்மாதிரியான சிறந்த எடுத்துக்காட்டு!
சுதந்திரம், சுயராஜ்ஜியம், சுதேசியம் பேசும் மத்திய - மாநில அரசுகளே செய்யத் தவறியதை, தமிழ்நாட்டு வணிக அமைப்புகள் செய்யத் தொடங்கியுள்ளது முன்மாதிரியான சிறந்த எடுத்துக்காட்டு!
வெளிநாட்டிலிருந்து தவிர்க்க இயலாமல் மருந்துகள் வாங்க வேண்டியிருந்தால், அதை வாங்குவதோ, பயன்படுத்துவதோ, வணிக அமைப்புகள் விற்பதிலோ பெரிய ஆபத்து, மோசமான ஆயுள் குறைப்புகள், நோய்க்கான அழைப்புகள் அதில் இல்லை என்பதும், நோயைக் குணப்படுத்த இது தேவை என்பதும்தானே!
இந்திய தேசியம் வெறும் வார்த்தை ஜாலம்
68 ஆவது இந்தியக் குடியரசு நாளில், வெளிநாட்டு மூலதனங்களுக்காக எல்லாக் கதவுகளையும் அகலமாக மத்திய அரசு திறந்து வைத்துவிட்டால்,
இந்திய தேசியம் வெறும் வார்த்தை ஜாலம் என்பதைத் தவிர வேறு என்ன?
கழகத் தோழர்களே, வாங்காதீர் - பயன்படுத்தாதீர்!
திராவிடர் கழக இளைஞரணியினர், மாணவரணியினர், மகளிரணியினர் இம்மாதிரி குளிர்பானங்களை வாங்காதீர் - பயன்படுத்தாதீர்கள்.
உள்நாட்டு இளநீர், சர்பத், பதனி, மோர், தயிர் மற்றும் எலுமிச்சை பழப் பிழிவுகளை, கண்முன்னே பிழியச் செய்து தரப்படுபவைகளை ஊக்குவிக்கும் பிரச்சாரம் செய்யவேண்டும்.
தெருமுனைப் பிரச்சாரம் முதல் அனைத்தையும் செய்யுங்கள்
நம் நாட்டு சிறு தொழில் வணிகர்களை, வெளிநாட்டு பகாசுர பன்னாட்டுத் தொழில் திமிலர்கள் விழுங்குவதைத் தடுக்கும் முயற்சியை, சிறுதுளி பெருவெள்ளமாய்த் தொடங்கி, தெருமுனைப் பிரச்சாரம் முதல் அனைத்தையும் செய்யுங்கள்!
- கி.வீரமணி,தலைவர், திராவிடர் கழகம்
சென்னை, 27.1.2017